56 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி முழுவதும்... ரீ-சர்வே! டிஜிட்டல் முறையில் மறுசீரமைப்பு பணி ஜரூர்
56 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி முழுவதும்... ரீ-சர்வே! டிஜிட்டல் முறையில் மறுசீரமைப்பு பணி ஜரூர்
UPDATED : மே 17, 2026 08:42 PM
ADDED : மே 17, 2026 08:41 PM

புதுச்சேரி: மாநிலம் முழுதும் நிலங்களை மறுசீரமைப்பு செய்யும் 'ரீ-சர்வே' பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியம் முழுதும் இதற்கு முன்னதாக கடந்த 1970-களில் தான் மறு நில அளவை நடத்தப்பட்டது. அதன்பிறகு நகரப் பகுதிகளில் மட்டும் தனியாக ஒரு நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அக்காலத்தில், தயாரிக்கப்பட்ட நிலவரித் திட்ட பதிவேடுகள் மற்றும் எப்.எம்.பி., எனப்படும் புலப்படங்கள் தான் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றன. கால மாற்றத்திற்கு ஏற்ப நிலங்களின் எல்லைகளிலும், பயன்பாட்டிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், இந்த 56 ஆண்டு காலப் பழமையான ஆவணங்களை மாற்றி அமைப்பது தற்போதைய தேவையாக மாறியுள்ளது.
கைகோர்ப்பு:: பழமையான பதிவேடுகளால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதுச்சேரி அரசின் ஒப்புதலுடன் புதிய அறிவியல் பூர்வ டிஜிட்டல் சர்வே நடத்த முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளைத் தொய்வின்றி, மிகத் துல்லியமாகச் செய்வதற்காக மத்திய அரசின் இந்திய நில அளவைத் துறையை தொழில்நுட்பப் பங்குதாரராக புதுச்சேரி அரசு கைகோர்த்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, தற்போது நில அளவைத் துறை வல்லுநர்களின் மேற்பார்வையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பறக்கும் டிரோன்கள்:: பாரம்பரிய நில அளவை முறைகளுக்குப் பதிலாக, அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் டிரோன்கள் மூலம் எல்லைகளை மார்க் செய்யும் பெரிய அளவிலான நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாகே பகுதியில் ஏற்கனவே டிரோன்களைப் பறக்கவிட்டு, அந்தப் பிராந்தியம் முழுதும் நில அளவை செய்யும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன. காரைக்கால் பிராந்தியத்தில் டிரோன்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது 95 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.
புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 186 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு டிரோன்களைப் பறக்கவிட்டு நில அளவை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஏனாம் பிராந்தியத்திலும் இந்த டிஜிட்டல் நில அளவைப் பணிகள் முறைப்படி தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய பகுதிகள்:: டிரோன் சர்வே பணிகளில் உள்ள ஒரே சவால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் உள்ள பகுதிகளில் டிரோன்களைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அளவை செய்வதற்கு இந்திய விமான நிலைய ஆணைக்குழுவிடம் அனுமதி கோரி அணுகப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், விடுபட்ட அந்தப் பகுதிகளிலும் முழுமையாக நில அளவை செய்து முடிக்கப்படும்.
நன்மைகள் என்ன?: நான்கு பிராந்தியங்களிலும் இந்த டிஜிட்டல் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக முடியும் போது, புதுச்சேரி மாநிலத்தின் மிகத் துல்லியமான நில அளவை வரைபடம் தயாராகிவிடும். இதன் மூலம் நில எல்லைப் பிரச்னைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் எளிதாகவும், துல்லியமாகவும் பெற முடியும். போலி ஆவணங்கள் தயாரிப்பது தடுக்கப்பட்டு, நிலப் பரிமாற்றங்கள் பாதுகாப்பானதாக மாறும்.
மத்திய அரசின் சர்வே அலுவலர்கள் இதற்கென புதுச்சேரியில் புதிய தரைக் கட்டுப்பாட்டு மையத்தை நிறுவி இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நில அளவை துறை பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த பணியை விரைந்து முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
