சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள்...வெளியீடு:நான்கு கட்டங்களாக நடத்த முடிவு
சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள்...வெளியீடு:நான்கு கட்டங்களாக நடத்த முடிவு
UPDATED : ஜூன் 04, 2026 08:15 PM
ADDED : ஜூன் 04, 2026 08:11 PM
புதுச்சேரி: இந்தாண்டிற்கான கவுன்சிலிங் நடைமுறைகளை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் வழங்கப்படும் பொறியியல், சட்டப்படிப்புகள், நர்சிங், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் உயிரியல் சார்ந்த இளநிலை படிப்பு உள்ளிட்ட நான்- நீட் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
விண்ணப்பம் பெற்ற கையோடு இந்த படிப்புகளுக்கு சென்டாக் ஒற்றைச் சாளர முறையில் இணையவழியாக கவுன்சிலிங் நடத்த உள்ளது. இதற்கான கவுன்சிலிங் வழிகாட்டுதல்கள்-நடைமுறைகள் சென்டாக் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்.
தகுதிப் பட்டியல் வெளியிடுதல்:: மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் சென்டாக் தரப்பில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்படும். இந்தத் தகுதிப் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும். முதலாவது டிராப்ட் லிஸ்ட் எனும் வரைவு தகுதிப் பட்டியல் இது ஆரம்பகட்ட சரிபார்ப்புக்குப் பின் வெளியிடப்படும்.
இரண்டாவது திருத்தப்பட்ட வரைவு தகுதிப் பட்டியல் மாணவர்களின் குறைகள் மற்றும் திருத்தங்களுக்குப் பின் வெளியிடப்படும். அடுத்து மூன்றாவது மற்றும் இறுதி தகுதிப் பட்டியல். இதுவே இறுதிப் பட்டியலாகும்.
இறுதிப் பட்டியலின் அடிப்படையிலேயே முதற்கட்ட கவுன்சிலிங் இடஒதுக்கீடு நடைபெறும். இந்த இடஒதுக்கீடு மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் சுற்றுகள் மாணவர்களின் தகுதி, அவர்கள் அளித்த பாடப்பிரிவு விருப்பத் தேர்வு மற்றும் அரசாங்கத்தின் இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக சீட்கள் ஒதுக்கப்படும்.
கவுன்சிலிங் சுற்றுகள்:: இந்த நான்--நீட் கவுன்சிலிங் சுற்று- 1, சுற்று- 2, சுற்று-3 மாப்-அப் சுற்றை பொருத்தவரை மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும். கூடுதல் இடங்கள் இருந்தால், தேவை இருந்தால் மாப் அப் கவுன்சிலிங் கூடுதலாக நடத்தப்படும்.
புதிய விருப்பத்தேர்வுகள்:: மாணவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க விரும்பினால், ஒவ்வொரு சுற்றுக்கும் தங்களின் கோர்ஸ் பிரிபரன்ஸ் எனும் புதிய விருப்பத்தேர்வுகளை சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய சுற்றுகளில் சமர்ப்பிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஒவ்வொரு சுற்றிலும் பாடங்கள், கல்லுாரிகளை விருப்ப தேர்வாக குறிப்பிட வேண்டும். இல்லையெனில், சீட் ஒதுக்கப்படாது.
சீட்டுகள் நிரம்பாவிட்டால்:: எஸ்சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான இடங்கள் ஏதேனும் காலியாக இருந்தால், அவை பொதுப் பிரிவாக மாற்றப்பட்டு மாப் -அப் சுற்றின் போது கவுன்சிலிங் நடத்தப்படும்.
தற்காலிக ஒதுக்கீடு:: ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் புரவோஷனல் அலர்ட்மென்ட் எனும் தற்காலிக இட ஒதுக்கீட்டுப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தத் தகவலும் அனுப்பப்பட மாட்டாது.
சீட் கிடைத்தால்:: இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் இருந்து தங்களின் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த நேரடி சேர்க்கை ஆணை கிடைத்தவுடன், மாணவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு நேரடியாகச் சென்று அசல் சான்றிதழ்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்தித் தங்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மாணவருக்குப் பதிலாக வேறு யாரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது சேர்க்கை பெறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என, சென்டாக் அறிவித்துள்ளது.
சீட் பறிபோகும்: ஒரு மாணவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட தேதிக்குள் கல்லுாரியில் ரிப்போர்ட் செய்து சேர தவறினால், அந்த இடம் காலியானதாகக் கருதப்பட்டு அடுத்த கவுன்சிலிங் சுற்றில் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். கவுன்சிலிங் தொடர்பான அனைத்துத் தகவல்களும் எஸ்.எம்.எஸ்., மூலமாக மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மட்டுமே அனுப்பப்படும். மேலும், சென்டாக் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் செய்திக் குறிப்புகள் மற்றும் அறிவிப்புகளை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.
குறைகளை சொல்ல.. மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகளைத் தங்களின் டேஸ்போர்டு கிரீவன்ஸ் என்ற பகுதி மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 24 மணி நேரத்திற்குள் உரிய பதில் வழங்கப்படும் என, சென்டாக் அறிவித்துள்ளது.
