கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் வேண்டுகோள்
கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் வேண்டுகோள்
ADDED : செப் 11, 2026 07:45 PM
புதுச்சேரி: கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் டில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு ஆணைய சேர்மன் அந்தர் சிங் ஆர்யாவிற்கு இ–மெயில் மூலம் அனுப்பியுள்ள மனு:
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காரிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின இருளர் சமுதாயத்தை சேர்ந்த ஆனந்தன், தேன்மொழி தம்பதியினர் அப்பகுதியில் உள்ள தனியார் மரக்கிடங்கில், மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர்.
நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உரிமையாளர் அனுமதி மறுத்துள்ளார். இதனால், தேன்மொழியும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது சம்பந்தமாக பொன்னேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் கொத்தடிமைகளாய் பயன்படுத்தும் நிலை தமிழகத்தில் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. எனவே கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
