அரசு பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
அரசு பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஏப் 12, 2026 10:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பணியிடங்களுக்கான விண்ணப்பக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இளைஞர்கள் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, அரசு பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் 388 யு.டி.சி., பணியிடங்கள் முக்கியமானது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் 58 எல்.டி.சி., பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 முதல் இன்று (ஏப்ரல் 13) வரை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஓட்டுபதிவு நடைபெற்ற சூழலில், 10ம் தேதி அரசின் இணையதளத்தில் விண்ணப்பம் பெறவில்லை. அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் சரியாக செயல்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முயன்றும், இணையதளத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இணையதள முடக்கத்தால் எங்களால் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை. இன்றுடன் எல்.டி.சி., விண்ணப்பக் காலம் முடிவடைகிறது. நாளை யு.டி.சி., காலக்கெடு முடிகிறது. தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்த பாதிப்பை சரிசெய்து, இழந்த நாட்களுக்கு ஈடாக விண்ணப்பக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதே புதுச்சேரி இளைஞர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
