ADDED : ஏப் 29, 2026 04:33 AM

புதுச்சேரி: உழந்தை ஏரியை கோடை காலத்திலேயே துார்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட அரும்பார்த்தபுரம் பைபாசில் அமைந்துள்ள உழந்தை ஏரி நகரப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் தேங்கும் மழைநீர் காரணமாக குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏரியில் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால், ஏரி முழுதும் தண்ணீர் இன்றி வறண்டு வாய்க்கால் போல் காட்சியளிக்கிறது.
இதற்கிடையே, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் இன்றி வறண்டு வரும் ஏரி பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
எனவே, உழந்தை ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கோடை காலத்தை பயன்படுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகள், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, ஏரியை முழுமையாக துார்வாரி அதிகப் படியான தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர்கரை வட்டார மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். .
