காட்டேரிக்குப்பம் - வில்லியனுார் வழியாக பஸ் இயக்க கோரிக்கை
காட்டேரிக்குப்பம் - வில்லியனுார் வழியாக பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2026 07:12 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் இருந்து வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனுார் வளர்ந்து வரும் நகரப்பகுதியாக மாறியுள்ளது. இங்கு, தெற்கு சப் கலெக்டர் அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வருவாய் துறை மூலம் சான்றிதழ் பெறுவதற்கும், குடும்ப பிரச்னை தொடர்பாக புகார் அளிக்கவும், மாணவர்கள் மேற்படிப்பிற்கும் வில்லியனுார் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், காட்டேரிக்குப்பம் பகுதியில் நேரடியாக வில்லியனுார் பகுதிகளுக்கு போதிய பஸ் வசதிகள் இயக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் வழுதாவூர் வழியாக பத்துக்கண்ணு சென்று அங்கிருந்த மற்றொரு பஸ் மூலம் வில்லியனுார் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அவசர தேவைக்கு வில்லியனுார் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தினசரி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் நலன்கருதி காட்டேரிக்குப்பத்தில் இருந்து வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
