பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை
பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 27, 2026 09:56 PM
புதுச்சேரி: பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்ககோரி புதுச்சேரி மாநில பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தலைவர் ஆசைத்தம்பி விடுத்துள்ள அறிக்கை:
தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 67 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், குடும்ப வறுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சளுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மாதம் மானிய தொகையாக ரூ.6 கோடி வந்துள்ளது. ஆனால், மானிய தொகை வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுத்ததாக தெரியவில்லை.
ஆகையால், தற்போது வந்துள்ள மானியத்தொகையை கொண்டு, ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான 67 மாத நிலுவை சம்பளத்தில், 10 மாதம் சம்பளம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி 75 மாத நிலுவை தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
