பல்கலை ஓய்வு பெற்ற ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு
பல்கலை ஓய்வு பெற்ற ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு
ADDED : மார் 18, 2026 04:25 AM
புதுச்சேரி: நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவில்லை எனில் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில், முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கத் தலைவர் இசைவாணன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை மத்திய மற்றும் புதுச்சேரி அரசு உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.
ஆனால், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் 8 மாதத்திற்கு பதிலாக பிப்ரவரி மாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளது.
மீதமுள்ள 7 மாத்திற்கான அகவிலைப்படி நிலுவை வழங்காதது குறித்து காரணம் தெரிவிக்க மறுத்து வருகிறது. மேலும், 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி பலன்கள் மற்றும் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை கிடைப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
எனவே, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உடனடியாக 7 மாத அகவிலைப்படி, 2016ம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
