ADDED : ஜூன் 06, 2026 04:33 AM

புதுச்சேரி: புது பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை கண்டித்து, அப்பகுதியையொட்டி உள்ள ராஜா நகர், அருந்ததி நகர், முத்தமிழ் நகர், அய்யனார் நகர், சுப்பையா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 7:30 மணியளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு மற்றும் போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., ரச்சனா சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வரும் காலங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து, 8:30 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
