ADDED : ஜூன் 25, 2025 07:59 AM

வில்லியனுார் : கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி மீது 'போதை மற்றும் உளவியல் மருந்துகள் சட்டவிரோ கடத்தல் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வில்லியனுார் அடுத்த ஜி.என் பாளையம், நடராஜன் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் மாருமணி (எ) மணிகண்டன், 30. இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, காலப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, விசாகபட்டினம் உள்ளிட்ட மாநிலங்களில் கஞ்சா கடத்தல் வழக்குள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டவிரோத போதை கடத்தல் செயலில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்குடன் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மணிகண்டன் மீது 'போதை மற்றும் மருந்து பொட்களின் சட்டவிரோத கடத்தல் சட்டம்-1988'ன் படி நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மணிகண்டனை ஒரு வருடம் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
