ADDED : டிச 27, 2024 05:59 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ. 61 ஆயிரம் இழந்துள்ளனர்.
பூராணங்குப்பம், காமராஜ் சாலையை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறினார்.
இதையடுத்து, பாலபாஸ்கர் ரூ. 10 லட்சத்திற்கான லோன் பெற விண்ணப்பித்தார். அதற்கு அவர், 21 ஆயிரத்து 850 ரூபாய் செயலாக்க கட்டணம் செலுத்தி ஏமாந்தார்.
அரும்பார்த்தபுரம், சண்முகா நகர் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த மெர்ரில்சாம் ஷிஜூ என்பவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் மூதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
அதைநம்பி அவர், மர்ம நபர் தெரிவித்த நிதி நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதேபோல் வில்லியனுார், மூர்த்தி நகரை சேர்ந்த விஸ்வநாதன் 6 ஆயிரத்து 401 ரூபாய், புதுச்சேரியை சேர்ந்த அமுதன் 3,000, பாகூர் சிவபிரகாசம் 5,000 என, 5 பேர் 61 ஆயிரத்து 251 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
