ADDED : ஆக 25, 2026 01:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி, 16வது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை, கவர்னர் கைலாஷ்நாதனின் உரையுடன் தொடங்கியது. மாலை, 3:00 மணியளவில், என்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த முதல்வர் ரங்கசாமி, 14,300 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புகள்:
புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி அளவை மாற்றியமைத்து, கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பாக வழங்கப்படும். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணைய், சர்க்கரை, அத்தியாவசிய பொருட்கள் அடக்க விலையிலும் விற்பனை செய்யப்படும்.
அரசு, அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் வசதி செய்யப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் , 10ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கையடக்க 'டேப்லெட் பிசி' இந்த நிதியாண்டு முதல் வழங்கப்படும். இதன் மூலம், 16,250 மாணவர்கள் பயனடைவர்.
சுதந்தர போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம், 15,000ல் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப் படும். பெண்களின் திருமண உதவித்தொகை உயர்த்தப்படும்.
பயணம் செய்ய இயலாத முதியோர், மாற்று திறனாளிகளுக்கு இருப்பிடத்திலேயே மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவ சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
நாட்டில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து கடல் ஆமைகள் பாதுகாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டார்.
