ADDED : ஜூன் 05, 2026 04:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது. ஆனால், கடந்த வாரம் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முழுதும் உள்ள அனைத்துப் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
38 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் சீருடைகளுடன் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். முதல் நாளான நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களின் பயத்தைப் போக்கும் வகையில், ஆசிரியர்கள் வாசலிலேயே நின்று அவர்களுக்குப் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றே, மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
