தீபாவளிக்கு 10 கிலோ அரிசி மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
தீபாவளிக்கு 10 கிலோ அரிசி மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
ADDED : அக் 25, 2024 06:20 AM

புதுச்சேரி: தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ரேஷன் கடைகளில் கொடுப்பதற்காக லாரிகளில் வர துவங்கியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து, கடந்த 21ம் தேதி தீபாவளி இலவச அரிசி திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து ரேஷன் கடைகளில் இன்னும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், குடிமை பொருள் வழங்கல் துறைக்கு தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை மூட்டைகள் நேற்றுமுன்தினம் முதல் லாரிகளில் வர துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் காரைக்காலுக்கு 501 டன் இலவச அரிசியும், புதுச்சேரிக்கு 50 டன் இலவச அரிசியும் வந்தன.
தொடர்ந்து லாரிகளில் வந்த அரிசி, சர்க்கரை மூட்டைகளில் ரேஷன் கடைகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் பிரித்து இறக்கப்பட்டன.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 100 மூட்டை வரை தான் இறக்க முடியும். எனவே அருகில் உள்ள இடங்களில் இலவச அரிசி, சர்க்கரை மூட்டைகள் இறக்கப்படுகின்றன. அரிசி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிந்ததும் அந்தந்த எம்.எல்.ஏக்கள் மூலமாக வழங்கப்படும் என்றனர்.
