377 குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு ஏழு நாட்கள் சிறப்புப் பயிற்சி நிறைவு
377 குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு ஏழு நாட்கள் சிறப்புப் பயிற்சி நிறைவு
ADDED : செப் 03, 2026 03:30 PM
புதுச்சேரி: குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு அவசரகால பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீயணைப்புத் துறை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி, நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 244 மாவட்டங்களில் குடிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில் 360 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 377 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமில் ஒவ்வொரு நாளும் தலைமை பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள், கடலோரக் காவல் படை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அவசரகால மீட்புப் பணிகள் குறித்த பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்களை அளித்தனர்.
முகாமின் நிறைவு நாளில், பயிற்சியில் பங்கேற்ற 377 தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் குலோத்துங்கன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இப்பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாகவும், பேரிடர் காலத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட உதவும் வகையிலும் அமைந்திருந்ததாகப் பங்கேற்ற தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
