குடிநீரில் சோப்பு திரவம் கலப்பு விகாரம் தனியார் நிறுவன இணைப்பு துண்டிப்பு
குடிநீரில் சோப்பு திரவம் கலப்பு விகாரம் தனியார் நிறுவன இணைப்பு துண்டிப்பு
ADDED : ஆக 12, 2026 06:12 PM
பாகூர்: பாகூர் அருகே குடிநீரில் சோப்பு திரவம் கலந்த சம்பவத்திற்கு காரணமான தனியார் நிறுவனத்தின் குடிநீர் இணைப்பை, பஞ்சாயத்து ஊழியர்கள் அதிரடியாக துண்டித்தனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அங்குள்ள பேட் பகுதியில் குடிநீர் குழாயில் வந்த தண்ணீர் நுரையாக பொங்கி வழிந்தது.
தகவலறிந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், அங்குள்ள வாஷிங் லிக்யூட் பேக் செய்யும் சிறிய கம்பெனியில் டேங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சோப்பு திரவத்தை, கரைக்க வேண்டி, குடிநீர் குழாயில் ரப்பர் பைப்பை சொறுகி அந்த டேங்கில் விடப்பட்டிருந்தது. தண்ணீர் நின்ற பிறகு, வாஷிங் லிக்யூட் டேங்கில் இருந்த குழாய் மூலம் குடிநீர் குழாய் வழியாக சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, குடிநீர் குழாய் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு நேற்று காலை சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆணையர் சதாசிவம் உத்தரவின் பேரில், குடிநீரை தவறாக பயன்படுத்திய அந்த கம்பெனி குடிநீர் இணைப்பை ஊழியர்கள் நேற்று துண்டித்தனர். சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பஞ்சாயத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
