/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாயை அடித்து கொலை செய்த மகன் கைது
/
தாயை அடித்து கொலை செய்த மகன் கைது
ADDED : நவ 15, 2024 05:13 AM

வானுார்: ஆரோவில் அருகே தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மனைவி மகாலட்சுமி, 62; கணவரை இழந்த இவர், மகன் சிவக்குமார், 37; என்பவருடன் தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த நாவற்குளம், செல்வதிருமகள் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மளிகை வியாபாரம் செய்து வந்த சிவக்குமார், வீட்டில் மளிகை பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். கடந்த 11ம் தேதி, வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் மின் கசிவு காரணமாக எரிந்து சேதமானது. இதற்கு தாய் தான் காரணம் என கருதி, மகாலட்சுமியை சிவக்குமார் தாக்கினார். இதில் தலையில் படுகாயமடைந்த மகாலட்சுமியை மருத்துவமனையில் சேர்க்காமல், புதுச்சேரி சந்தைபுதுக்குப்பத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, மறுநாள் 12ம் தேதி மகாலட்சுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். மாலை 3:00 மணிக்கு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம் மூலம் தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியதுடன், தாயின் உடலை பிரேத பரிசோதனை இல்லாமல் வழங்கும்படி கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார், நேற்று கதிர்காமம் அரசு மருத்துவமனையில் மகாலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில், இடதுபுற தலையில் பலமாக தாக்கியதில், மகாலட்சுமி உயிரிழந்தது உறுதியானது. அதன் பேரில் போலீசார் நேற்று, கொலை வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர்.