ADDED : ஜன 21, 2025 06:32 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி இன்று (21ம் தேதி) துவங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.
உப்பளம், பழைய துறைமுக வளாகத்தில் நடக்கும் துவக்க விழாவில், காலை 10:00 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்காசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த இடைநிலை மற்றும் உயர்நிலை பிரிவுகளில் மாநில அளவில் நடந்த கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர் தனிப்பிரிவின் 15 படைப்புகள், குழுப்பிரிவின் 10 படைப்புகள், ஆசிரியர் பிரிவின் 10 படைப்புகள் என 35 படைப்புகள் வீதம் மொத்தம் 210 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்படவுள்ளது.கண்காட்சியை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிடலாம். மாலை 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை கல்வித்துறை செயலர் ஜவஹர், இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
