/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15வது சட்டசபை கூட்ட தொடர்களில் 2,764 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
/
15வது சட்டசபை கூட்ட தொடர்களில் 2,764 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
15வது சட்டசபை கூட்ட தொடர்களில் 2,764 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
15வது சட்டசபை கூட்ட தொடர்களில் 2,764 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
ADDED : பிப் 13, 2026 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் 15வது சட்டசபை கூட்டத் தொடர்களில் 2,764 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நேற்று கூடிய புதுச்சேரி 15வது சட்டசபையின், 6வது கூட்டத் தொடரின் இறுதி கூட்ட முடிவில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில், சட்டசபையில் நடந்த 65 அமர்வு நாட்களில், 253 மணி நேரம் 54 நிமிடமும் சபை அலுவல்களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இத்தொடரில் மொத்தம் 1,910 உடுக்குறியிட்ட வினாக்களும், 965 உடுக்குறியிடா வினாக்களும் எம்.எல்.ஏ.,க்களிடம் பெறப்பட்டன.
அதில் 1,831 உடுக்குறியிட்ட வினாக்கள் மற்றும் 933 உடுக்குறியிடா வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டன. இதற்கு உறுதுணையாக செயல்பட்ட அரசு செயலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. சட்டசபையில் காகிதமில்லா நடைமுறையைக் கொண்டு வருவதற்காக, 'நேவா' திட்டத்தின் கீழ் நேவா சேவா கேந்திரா மற்றும் பயிற்சி மையம் கடந்தாண்டு பிப். 23ம் தேதி அமைக்கப்பட்டது. அதனை கடந்த ஜூன் 9ம் தேதி மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.
மாநில மக்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சி சார்ந்த பணிகளில் சபாநாயகராக எனது அதிகாரத்துக்கு உட்பட்டு பணியாற்றி உள்ளேன். அதற்காக சில நேரங்களில் கடுமையாக நடந்து கொண்டிருந்தாலும், அவை மக்கள் நலனுக்காக மட்டுமே அன்றி எந்த ஒரு தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியும் இல்லை.
முதல்வரின் ஆலோசனைபேரில் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் அனுமதி உள்ளிட்டவைகளுக்காக பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்துள்ளேன்.
எதிர் வரும் 16வது சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை நிறைவு பெற்றாலும், எதிர்காலத்தில் தொடர்ந்து புதுச்சேரி மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் எனக் கூறி, சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

