'நீட்' அல்லாத படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி... துவங்கியது: 12,288 மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி... துவங்கியது: 12,288 மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை
UPDATED : ஜூன் 07, 2026 09:04 PM
ADDED : ஜூன் 07, 2026 08:51 PM
புதுச்சேரி: நீட் அல்லாத சென்டாக் படிப்புகளுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ள சூழ்நிலையியில் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்டாக் நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 3ம் தேதியுடன் நிறைவடைந்தது. நீட் அல்லாத படிப்புகளை பொருத்தவரை சென்டாக்கிற்கு மொத்தம் 12,288 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி மாணவர்கள் 10,540 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ஒதுக்கீட்டிற்கு 1,518, கிராமப்புற ஒதுக்கீடு 776, ஜே.இ.இ மூலம் 1,810 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகள்:: பல்வேறு சமூக மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் 496, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 97, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 50, மாற்றுத்திறனாளிகள் 37, ராணுவத்தினரின் வாரிசுகள் 30, விவசாயிகளின் வாரிசுகள் 11, வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10, கிராமப்புற விரிவாக்க ஊழியர்களின் வாரிசுகள் 5 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மெரிட் லிஸ்ட் விறுவிறு...: விண்ணப்ப விநியோகம் முடிவுற்ற நிலையில், தற்போது சென்டாக் நிர்வாகம் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களைச் சரிபார்த்து, மெரிட் பட்டியல் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தத் தகுதிப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வரும் ஜூன் 17ம் தேதிக்குள் வரைவு மெரிட் பட்டியல் வெளியிடப்படலாம் என, சென்டாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரைவு மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், அதில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது குறைகள் இருந்தால், அதனைச் சரிசெய்ய மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளையும் முறையீடுகளையும் சென்டாக் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கலாம்.
மாணவர்களிடமிருந்து பெறப்படும் இந்த ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, மாணவர் சேர்க்கைக்கான இறுதி மெரிட் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் பிறகே கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு முறைப்படி கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும்.
கடும் போட்டி:: இந்த ஆண்டு நீட் அல்லாத படிப்புகளுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான போட்டி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விண்ணப்பித்துள்ளவர்களில் 10,540 பேர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் மாணவர்களுக்கான இடங்களை நிரப்புவதில் சென்டாக் வெளிப்படையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜூன் 17-க்குள் வரைவு பட்டியல் வெளியாகும் பட்சத்தில், நடப்பு ஆண்டுக்கான சென்டாக் சேர்க்கை செயல்முறைகள் திட்டமிட்டபடி தடையின்றி நிறைவடையும்.
விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய முடியுமா? நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடந்த 3ம் தேதியுடன் நிறைவுற்ற சூழ்நிலையில், இனிமேல் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமா என, சென்டாக் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்து இருந்தாலும் கல்லுாரி, விருப்ப படிப்புகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யலாம். வரைவு மெரிட் லிஸ்ட் வெளியாகும் வரை இதனை செய்ய முடியும். இதேபோல் மாணவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக தெரிவிக்கலாம். உடனடியாக தீர்வு அளிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை இருந்தாலும் அவற்றை கொடுத்து இணைக்கலாம் என்று தெரிவித்தனர்.
