பார்களில் ஹூக்கா பயன்படுத்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை: கலால் துறை எச்சரிக்கை
பார்களில் ஹூக்கா பயன்படுத்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை: கலால் துறை எச்சரிக்கை
ADDED : ஆக 30, 2026 06:02 PM

புதுச்சேரி: பார்களில் விதிகளை மீறி ஹூக்கா பயன்படுத்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி பார்களில் ஹூக்கா பயன்பாட்டை அனுமதிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக பல பார்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, உடலுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கும் நிக்கோட்டின் மற்றும் அபாயகரமான புகையிலைக் கலவைகளைச் சேர்த்து ஹூக்கா புகைக்க அனுமதிக்கப்படுவதாக கலால் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இப்புகார்களின் அடிப்படையில், கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு ரோந்துப் படைகள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் புதுச்சேரியின் முக்கியப் நகரப் பகுதிகளில் தீவிர நள்ளிரவுச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் செஞ்சி சாலைப் பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா மதுபானக் கூடத்தில், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக ஹூக்கா புகைக்க அனுமதிக்கப்படுவதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாகச் அங்கிருந்த ஹூக்கா உபகரணங்களை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
கலால் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘புதுச்சேரி சுற்றுலா பார்களில் ஹூக்கா பயன்படுத்தக் கூடாது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, இதேபோல் விதிகளை மீறிய மேலும் 3 மதுபானக் கூடங்களில் இருந்து ஹூக்கா கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா வகை மதுபானக் கூட உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தின் நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அதனை மீறி ஹூக்கா போன்ற தடைசெய்யப்பட்டவற்றை அனுமதித்தால் பார்களின் உரிமம் எந்தவித முன்அறிவிப்புமின்றி உடனடியாக ரத்து செய்யப்படும்’ என்றனர். கலால் துறையின் அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூக்கா புகைத்தால் என்ன பாதிப்பு கலால் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஹூக்கா பயன்பாடு என்பது சிகரெட்டை விடக் குறைவான ஆபத்து கொண்டது என்ற தவறான புரிதல் பலரிடம் உள்ளது. ஆனால், சிகரெட்டை விட நச்சுத்தன்மை அதிகம். ஒரு மணி நேர ஹூக்கா அமர்வின் போது, ஒருவர் சுமார் 100 சிகரெட்டுகளுக்குச் சமமான புகையைச் சுவாசிக்கிறார். ஹூக்கா புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கன உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. ஒரே ஹூக்கா குழாயைப் பல வாடிக்கையாளர்கள் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதால், காசநோய் உள்ளிட்ட தீவிரத் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகமாகிறது’ என்றனர்.
