ADDED : ஆக 09, 2025 07:12 AM
காரைக்கால் : காரைக்காலில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
காரைக்கால், தலத் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் நித்தின் பிரியன், 18; இவர், வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு மாலை தனது மூன்று நண்பர்களுடன் திருநள்ளாறு அகலங்கண்ணு நீர் தேக்க அணை அருகில் குளிக்க சென்றார்.
அப்போது ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால், சக நண்பர்கள் ஆற்றில் படிக்கட்டில் குளித்து கொண்டிருந்தனர். ஆற்றில் குளித்த நித்தின் பிரியன் தண்ணீரில் மூழ்கி மாயமானார். சக நண்பர்கள் தேடியும் கிடைக்கடவில்லை. தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்புத்துறை ஊழியர்கள், மீனவர்கள் உதவியுடன் திருநள்ளாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மாயமான நித்தின் பிரியனை தேடி, 2 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர்.
இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
