ADDED : டிச 09, 2024 06:36 AM

வில்லியனுார்: சேதராப்பட்டு மரத்துாள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள் மூன்று மணிநேரம் போராடி அணைத்தனர்.
சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நபர், சன் பயோடெக் என்ற பெயரில் மரத்துாள் அரைக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 6:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.
தொழிற்சாலை மேலாளர் செல்வம் சேதராப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த மரத்துாள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து சேதரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
