வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் திடீர் பரபரப்பு
வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் திடீர் பரபரப்பு
ADDED : ஏப் 27, 2026 09:52 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு குடியிருப்பு அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு பணத்தை வழங்காத வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை அமீனாக்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, ரெயின்போ நகரில் கடந்த 2002ம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் மூலம் 49 குடியிருப்புகள் கட்டுமான பணியை, ஸ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கூடுதலாக ரூ.1.8 கோடியை வழங்க ஒப்பந்த நிறுவனம் கோரியது. அதனை வீட்டு வசதி வாரியம் ஏற்க மறுத்து, ஒப்பந்த தொகையை மட்டும் வழங்குவதாக தெரிவித்தத. இதனால், கட்டுமான நிறுவனம் ஆர்பிட்டேஷன் உதவியை நாடியது. இதனை விசாரித்த ஆர்பிட்டேஷன், கட்டுமான நிறுவனத்திற்கு அந்த தொகையை வழங்க உத்தரவிட்டது.
இருப்பினும், வீட்டு வசதி வாரியம் அந்த பணத்தை வழங்காததால், கட்டுமான நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தது. அதன்படி, மூன்றாவது மாவட்ட நீதிமன்றம் அந்த பணத்தை 2025ம் ஆண்டிற்குள் வழங்க வேண்டும். தவறினால், அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து வீட்டு வசதி வாரிய நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர். ஆனால், வீட்டு வசதி வாரியம் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவனம் முறையிட்டது.
அதனை விசாரித்த நீதிபதி கோதண்டராஜ் வீட்டு வசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அமீனாக்கள் ஜெய் அம்பி தலைமையில் ஊழியர்கள் நேற்று நெல்லித்தோப்பில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர்.
அவர்களிடம், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பணத்தை விடுவிக்க இயலவில்லை. மேலும், வாரியத்தின் சேர்மன் மேற்கு வங்க தேர்தல் பார்வையாளராக சென்றுள்ளதால் அவர் வந்தவுடன் பணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும், அதற்கான கோப்புகளை காண்பித்தனர்.
அதனையேற்று, அமீனாக்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தினால், வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
