/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக பொங்கல் பரிசில் கரும்பு; புதுச்சேரியில் ஜோடி ரூ. 200
/
தமிழக பொங்கல் பரிசில் கரும்பு; புதுச்சேரியில் ஜோடி ரூ. 200
தமிழக பொங்கல் பரிசில் கரும்பு; புதுச்சேரியில் ஜோடி ரூ. 200
தமிழக பொங்கல் பரிசில் கரும்பு; புதுச்சேரியில் ஜோடி ரூ. 200
ADDED : ஜன 13, 2024 07:04 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு பன்னீர் கரும்பு வருகை குறைவாக இருப்பதால் நேற்று ஒரு ஜோடி கரும்பு ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம்பெறும். இதுதவிர சர்க்கரை வள்ளி கிழங்கு, பிடி கரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது. விவசாயிகளிடம் ஒரு கரும்பின் உயரத்தை பொருத்து ரூ. 36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.
பன்ருட்டி , பாலுார் , கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி .நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பன்னீர் கரும்பு வரும். தமிழக அரசின் நடவடிக்கையால், நேற்று குறைவான பன்னீர் கரும்புகள் புதுச்சேரிக்கு வந்தது. இவை உழவர்சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் 200க்கு விற்பனையானது.
பூக்கள் விலையும் நேற்று அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ. 140 முதல் ரூ. 200 வரையிலும், ரோஜா ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200க்கும், அரும்பு கிலோ ரூ. 2000க்கும், குண்டுமல்லி கிலோ ரூ. 2500க்கு விற்பனை செய்யப்பட்டது.
மஞ்சள் கொத்து ஒன்று ரூ. 20 முதல் ரூ. 40ம், சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ. 50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ. 30க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ. 20க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரிகள் கூறுகையில்; கரும்பு வருகை குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்பு லோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.