ADDED : செப் 12, 2026 06:04 PM

திருக்கனுார்: திருக்கனுார் பண்மை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகள், மண் வள மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
சோரப்பட்டு உழவர் உதவியகத்தில் நடந்த முகாமிற்கு, துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில், வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்று, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைந்தார்.
காரைக்கால் வேளாண் கல்லுாரியின் உழவியல் துறை நிபுணர் ஸ்ரீதேவி, உழவியல் சார்ந்த வேளாண் நடைமுறைகள் குறித்தும், பூச்சியியல் துறை நிபுணர் தமிழ்செல்வன் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுபாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இதில் சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயம்பட்டு, வம்புப்பட்டு கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல்விளக்க உதவியாளர் பாலசுப்ரமணியன், தங்கதுரை, பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.
