ஆக்சிஜன் டியூப் வெடித்து பெண் இறந்தது குறித்து தாசில்தார் விசாரணை
ஆக்சிஜன் டியூப் வெடித்து பெண் இறந்தது குறித்து தாசில்தார் விசாரணை
ADDED : ஆக 25, 2026 11:24 PM
காரைக்கால்: காரைக்காலில் அரசு ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் டியூப் வெடித்து பெண் உயிழந்த சம்பவம் குறித்து தாசில்தார் தலைமையில் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
காரைக்கால், கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்த திருமொழி மனைவி ரேவதி, 45. நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின், ஆஞ்சியோ சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அரசு ஆம்புலன்சில் ஆக்சிஜன் உதவியுடன் ரேவதி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆக்சிஜன் டியூப் வெடித்ததால் ரேவதி இறந்தார்.
அவரது உறவினர்கள், உயிர்காக்கும் உபகரணங்களை அலட்சியமாக கையாண்ட அரசு மருந்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ரேவதி இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவின் அடிப்படையில் தாசில்தார் பொய்யாமூர்த்தி தலைமையில் ஜிப்மர் மயக்கவியல் டாக்டர் ஓம்பிரகாஷ், டாக்டர் சுரேஷ் மற்றும் வட்டாரப் போக்குவரத்து உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் நவநீத், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ரேவதி உயிழந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நேற்று ஆய்வு செய்தனர். ஆம்புலன்சில் பயன்படுத்திய ஆக்சிஜன் டியூப் பிரஷர் தாங்காமல் வெடித்ததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
