மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் தமிழ் மாதிரி வழக்கு வாத போட்டி நிறைவு
மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் தமிழ் மாதிரி வழக்கு வாத போட்டி நிறைவு
ADDED : செப் 07, 2026 11:14 PM

புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் , சட்டக் கல்லுாரிகளுக்கு இடையேயான 3வது மாநில அளவிலான தமிழ் மாதிரி வழக்கு வாத போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாஜலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக இப்போட்டியின் துவக்க விழாவில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (சென்னை அமர்வு) நீதித்துறை உறுப்பினரும் துறைத் தலைவருமான நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சென்னை உயர் நீதிமன்ற தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 31 சட்டக் கல்லுாரிகள் மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில், சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் பரத சக்கரவர்த்தி நடுவராக பங்கேற்று மாணவர்களின் வாதத் திறனை ஆய்வு செய்தார்.
இப்போட்டியில் சிறப்பான வாதங்களை முன்வைத்து சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லுாரி முதல் பரிசினை வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பின் அரர் பேசுகையில், எனது கல்லுாரி காலத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் நினைவுக்கு வருவது மூட் கோர்ட் அனுபவங்களே என்று குறிப்பிட்டார்.
சட்டக் கல்லுாரியின் டீன் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார்.
