ADDED : ஆக 19, 2026 11:44 PM
புதுச்சேரி: சகோதரர் வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய விவாகரம் தொடர்பாக தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022ம் ஆண்டு ஆக., 8ம் தேதி புதுச் சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து, மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையை பெற தமிழக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக வேண்டு மென, உத்தரவிட்டபோதும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அமைச்சர் மரியவில்சன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில் வக்கீல் ஆஜராகி தமிழக சட்டசபை நடப்பதால் நேற்று கோர்ட்டில் ஆஜராக இயலவில்லை என, குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை நாளை 21ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி சேரலாதன் உத்தரவிட்டார்.
