/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூவர் வெட்டிக்கொலை; புதுச்சேரியில் பயங்கரம்
/
மூவர் வெட்டிக்கொலை; புதுச்சேரியில் பயங்கரம்
ADDED : பிப் 15, 2025 02:09 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், மூன்று வாலிபர்களை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெருவில், மேற்கூரை இல்லாத பாழடைந்த வீட்டில், 4 அடி உயரத்தில் இடிந்த இரு சுவர்கள் மட்டுமே உள்ளன. இங்கு, நேற்று காலை மூன்று வாலிபர்கள் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தும், ஒருவர் உயிருக்கு போராடிய படியும் கிடந்தனர்.
பெரியக்கடை போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் இறந்தார். டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி.க்கள் ரகுநாயகம், ஜிந்தா கோதண்டராமன், வீரவல்லபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள், உழவர்கரை, வின்சென்ட் வீதியைச் சேர்ந்த ரிஷி, 20, அவரது நண்பர் உருளையன்பேட்டை, திடீர் நகர் தேவா, 21, மூலக்குளம், ஜெ.ஜெ., நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ஆதி, 20, என, தெரியவந்தது.
இதில், ரிஷி, ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி தெஸ்தான் மகன் என்பதும் தெரிந்தது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக சிறிது துாரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மூன்று உடல்களும் கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ரெயின்போ நகர் சத்யா, முருங்கப்பாக்கம் முகிலன் தரப்பிற்கும், முதலியார்பேட்டை விக்கி தரப்பிற்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 2023 ஆக., 19ம் தேதி நெல்லிக்குப்பம், சித்தரசூர் வயல்வெளியில் முகிலன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், விக்கி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த விக்கி, தமிழரசன் டீம் சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
சத்யா எங்கு செல்கிறார் என்பதை கண்காணிக்கும் வேலையை ரிஷியிடம் கொடுத்திருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ரிஷி தன் நண்பர்கள், தேவா, ஆதியுடன் சத்யாவை பின் தொடர்ந்து சென்றபோது, சத்யா, அவரது கூட்டாளிகள் சுற்றி வளைத்து ரிஷி, தேவா, ஆதியை தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று, ரெயின்போ நகரில் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
இருப்பினும், முழு விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்த ரெயின்போ நகர், 2 அடி இடைவெளி கூட இன்றி, வரிசையாக குடியிருப்புகள் கொண்ட பகுதி. இங்கு மூவரை கொலை செய்த கும்பல், சர்வ சாதாரணமாக தப்பிச் சென்றுள்ளது. இந்த படுகொலை சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

