/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்
/
வள்ளலார் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்
ADDED : பிப் 12, 2025 04:03 AM

புதுச்சேரி -: புதுச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தில், 76ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது.
கோவிலில், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அகவல் பாடி, சத்திய ஞானக்கொடி ஏற்றப்பட்டது. சங்க பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தலைமையில், வள்ளலார் திருஉருவப்பட ஊர்வலத்தை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கடலுார் சாலை, புவன்கரே வீதி, ரோடியார் மில் வீதி, வள்ளலார் மடம் வரை ஊர்வலம் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு திரு அகவல் உணர்ந்தோதுதல், 8:00 மணிக்கு ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து, நடந்த கருத்தரங்கில், தமிழ்மாமணி வேல்முருகன், ஆய்வறிஞர் தமிழ்மணி, ராமதாஸ் காந்தி, இளவரசி சங்கர் ஆகியோர் பேசினர்.
பகல் 1:00 மணிக்கு ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. மாலை ஷண்முகபிரியா, மணிமாறன், கந்தன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியும், தர்ஷிணியின் பரதநாட்டியம், அருள்ஜோதி வள்ளலார் யோகா மையத்தின் யோகா நிகழ்ச்சியும் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க பொறுப்பு தலைவர் ஜெகநாதன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.