தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிடப்பில் போடப்பட்ட திருக்கோவிலுார் புராதான நகர் திட்டம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் அவதி

கிடப்பில் போடப்பட்ட திருக்கோவிலுார் புராதான நகர் திட்டம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் அவதி

கிடப்பில் போடப்பட்ட திருக்கோவிலுார் புராதான நகர் திட்டம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் அவதி


ADDED : ஜன 25, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : புராதான நகர பட்டியலில் இடம் பெற்ற திருக்கோவிலுார் நகரை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் ஆன்மிக சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருக்கோவிலுாரை புராதான நகரமாக அறிவித்தார். அதற்கான வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி பணிகளையும் அறிவித்தார். அத்துடன் சுற்றுலா வளர்ச்சி கழகமும் தன் பங்கிற்கு நிதி வழங்கியது.

அதனடிப்படையில், திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி, சன்னதி வீதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இருபுறமும் நடைபாதை உருவாக்கும் திட்டத்தை அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர். குறிப்பாக குளத்தை சீரமைக்கும் பணி 40 சதவீதத்தில் முடிக்கப்படாமல் விடப்பட்டது.

அதன்பிறகு வந்த அரசுகள் திருக்கோவிலுாரின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தியது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்ற அந்தஸ்துடன் கட்டுமான பணிகள் நடந்து வருவது, அரசு கல்லுாரி உருவாக்கப்பட்டதை தவிர குறிப்பிட்ட சொல்லும் அளவிற்கு நகரில் எந்த திட்டமிடலும் மேற்கொள்ளாதது நகர மக்களுக்கு மட்டுமல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும் வேதனையான நிகழ்வு தான்.

தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மீண்டும் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றுலா வளர்ச்சி கழகம் இக்குளத்தை சீரமைப்பு செய்வதற்காக பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பணியை துவக்கி செயல்படுத்தாமல் விட்ட நிலையில், தற்போது இந்து சமய அறநிலைத்துறை மூலம் பணி துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புராதான நகரம் என்ற அந்தஸ்துக்கு காரணம் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை பேணி காக்கும் வகையில் பெரிய ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைத்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அந்த கால்வாயில் ஒரு சில இடங்களில் மட்டுமே அடைப்பு இருக்கும் நிலையில் புராதான கால்வாயை அப்படியே கைவிட்டு விட்டு புதிதாக குழாய் அமைத்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் திட்டத்தை போட்டிருப்பது பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் சன்னதி வீதியில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அப்பொழுது சுற்றுலா வளர்ச்சி கழகம் ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகிப் போனது. தற்பொழுது கூட நகராட்சி நிர்வாகம் சன்னதி வீதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை செய்ய எந்த வழி வகையும் செய்ததாக தெரியவில்லை.

புராதான நகரங்கள் பட்டியலில், சுற்றுலா வளர்ச்சி கழகம், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், கபிலர் குன்று, ஞானானந்தா தபோவனம் ஆகியவற்றை சேர்த்து வைத்துள்ளது.

இத்துடன் பார்ப்பதற்கு இங்கே ஏராளமான இடங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நாயன்மார்களில் முக்கியமானவரான மெய்ப்பொருள் நாயனாரின் சித்தி வளாகம், ஞானியார் மடம், ரகூத்தமர் மூல பிருந்தாவனம் என பழமையின் பட்டியல் நீள்கிறது.

எனவே சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு இட நெருக்கடியால் தவிக்கும் பஸ் நிலையத்துக்கு மாற்றாக புதிய பஸ் நிலையம், ஏரியிலிருந்து குளத்திற்கு வரும் பழமையான பாதாள கால்வாயை மீண்டும் புணரமைப்பது, பாதாள சாக்கடை திட்டம், குறிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றை, அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் புராதான நகரத்தின் பெருமை மேம்படுவதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்தவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us