ADDED : பிப் 09, 2024 05:47 AM

புதுச்சேரி: போலி ஆவணம் தயாரித்து இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி-சவரிராயலு வீதி சந்திப்பில் உள்ள வீட்டுடன் கூடிய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் மாலதி,53, என்பவர் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் பெரியக்கடை போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். கட்டடம் இடிப்பதையும் தடுத்து நிறுத்தினர்.
மாலதி கூறுகையில், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன். எங்களுடைய பூர்வீக சொத்தினை மருந்து கடைக்கு நீண்ட காலமாக வாடகைக்கு விட்டுள்ளோம். தற்போது எனது கணவர் ஞானு அல்போன்ஸ் பவர் ஆப் அட்டர்னி கொடுத்ததாக கூறி, நான்கு கடைகள் போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்டுள்ளன.
அந்த இடத்தினை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முயற்சி நடக்கிறது. இந்த மனை எனது மாமியார் பொன்னுமேரி பெயரில் உள்ளது. அப்படி இருக்கும்போது எனது கணவர் எப்படி பவர் ஆப் அட்டர்னி கொடுக்க முடியும். பிரான்சில் இருந்து வந்த பிறகு தான் இட அபகரிப்பு தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட்டு எங்களுடைய இடத்தை மீட்டு தர வேண்டும்' என்றார்.
அவர், கலெக்டர், மாவட்ட பதிவாளரை இன்று சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.
