/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது! முதல்வர் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
/
புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது! முதல்வர் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது! முதல்வர் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது! முதல்வர் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
ADDED : பிப் 16, 2024 07:18 AM

என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு, நடப்பு 2023 -24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் மாதத்தில் தாக்கல் செய்தது. 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறைபடி, செப்டம்பர் 9ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது.ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால், மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22ம் தேதி காலை 9.45 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
அன்றைய தினம் நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2024--25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து சபாநாயகர் செல்வம் நேற்று கூறியதாவது:
புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினத்தில் 2024--25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். முன்னளிப்பு மானிய திட்ட முன்வரைவு முதல்வர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்படும். . சட்டசபை முன் வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.
கூடுதல் நிதிக்கான செலவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களிலும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட்தான். 2023--24ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பும் உள்ளது. எத்தனை நாட்கள் சட்டசபை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.