ADDED : ஆக 17, 2026 07:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் அரசு ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி டெக்னீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர், வயர்மேன், வெல்டர், மின்சார வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், கட்டடம் கட்டுபவர், கம்ப்யூட்டர் இயக்குபவர் மற்றும் டிரோன் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் நடைபெற்று வருகிறது.
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெற தவறியவர்கள் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் சந்தித்து உடனடி சேர்க்கை பெறலாம்.
இதர ஐ.டி.ஐ-க்கள்: இதேபோல், வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., வில்லியனுார், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் காலியாக உள்ள பிரிவுகளுக்கு ஸ்பாட் அட்மிஷன் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு வரும் தேதியில் காலியிடங்கள் உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டுமே சேர்க்கை அளிக்கப்படும்.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உடனடி சேர்க்கை வரும், 21ம் தேதி வரை நடக்கிறது. தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்தகவலை அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் தெரிவித்துள்ளார்.
