ADDED : நவ 02, 2024 07:24 AM
புதுச்சேரி: தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகையால் புதுச்சேரி நகரப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 30ம் தேதி முதல் 3ம் தேதி வரை 5 நாட்களும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீபாவளி தினமான 31ம் தேதி முதல் 3ம் தேதி 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால், கடற்கரை, பாரதி பூங்கா, சட்டசபை வளாகம், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதியது.
மேலும், சுற்றுலா பயணிகளின் அதிப்படியான வருகையில், புதுச்சேரி நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணாமாக, புதுச்சேரி நகரமே ஸ்தம்பித்தது.
