புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 15, 2026 03:32 AM
பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை இரவு 8:00 மணி முதல் நாளை மறுநாள் காலை 8:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து தெற்கு பிரிவு எஸ்.பி., பக்தவச்சலம் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி -கடலுார் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மற்றோரு பிரிவு சாலையின் மறுபுறம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகங்களுக்கு செல்வதற்கு, புதுச்சேரி - கடலுார் சாலையின் குறுக்கே புதுச்சேரி அரசு நெடுஞ்சாலை துறை மூலம் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும்பணி நடைபெற உள்ளது.
இந்த பணி நாளை 16ம் தேதி இரவு 8:00 மணி முதல் நாளை மறுநாள் (17ம்தேதி) காலை 8:00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட நேரத்தில் புதுச்சேரி - கடலுார் சாலையில் சம்பந்தப்பட்ட இந்த பகுதியில் மட்டும் அனைத்து வகை வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் - அபிஷேகப்பாக்கம் வழியாக விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை - கன்னியக்கோயில் - முள்ளோடை வழியாக கடலுார் செல்ல வேண்டும்.
கடலுாரிலிருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வகை வாகனங்களும் முள்ளோடை - கன்னியக்கோவில் - விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை,அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
