போக்குவரத்து விதிமீறல் :ரூ. 20 லட்சம் அபராதம் வசூல்
போக்குவரத்து விதிமீறல் :ரூ. 20 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஏப் 19, 2026 10:42 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் ஒரே வாரத்தில் ரூ. 20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சீனியர் எஸ்.பி., திவ்யா செய்திக் குறிப்பு;
புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக நிகழ்ந்த சாலை விபத்துகளை ஆய்வு செய்தது. இதில், பெரும்பாலான விபத்துகளுக்கு கவனச் சிதறலான ஓட்டுதல் முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது மற்ற சாலைப் பயணிகளின் உயிருக்கும், ஆபத்தை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது.
இதனை தடுக்கும் பொருட்டு, மாநிலத்தில் சிறப்பு அமலாக்க இயக்கம் துவங்கப்பட்டு, முக்கிய சந்திப்புகள் மற்றும் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 184 (சி)ன் கீழ் வழக்குப் பதிந்து தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் நேற்று (19ம் தேதி) வரை ஒரு வாரத்தில் மாநிலம் முழுதும் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. அதில், 2 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 20 லட்சத்து 14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகள் வரும் காலங்களிலும் தீவிரப்படுத்தப் படும். அவசர அழைப்புகள் ஏதேனும் வந்தால், வாகனத்தைப் பாதுகாப்பான இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டுப் பேச வேண்டும். விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
