ADDED : ஜூலை 21, 2025 04:58 AM

திருபுவனை : கே.குச்சிப்பாளையத்தில் புதிதாக ரூ.19.93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை அங்காளன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
கே.குச்சிப்பாளையம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., அங்காளன் மின்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் 200 கிலோ வாட்., திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கவும், எல்.டி., மின் பாதைகளை வலுவூட்டவும், மின்துறைக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் ரூ.19.93 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது. புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று, புதிய மின்மாற்றியை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
திருபுவனை துணை மின் நிலைய உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், வாதானுார் இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், மின்பாதை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.