ADDED : ஜன 25, 2025 05:32 AM

புதுச்சேரி : உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட வாலிபருக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூளை சாவடைந்து ஏழு பேருக்கு உடல் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்ட வாலிபர் பிரேம்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் துறையில் நடந்தது.
சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் கடந்த ஆண்டு உயிருடன் இருப்பவர்கள் தந்த கிட்னி தானத்தால், கிட்னி பெற்று பயனடைந்த கல்பனா, ஐஸ்வர்யா, பிரசாந்த், மணிகண்டன், ஜெயசீலி ஞான ஒளி, மற்றும் நடப்பாண்டில் மூளைசாவடைந்த பிரேம்குமாரின் கிட்னி தானம் பெற்ற கலைச்செல்வி ஆகியோரை சுகாதார துறை இயக்குனர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், சிறுநீரகவியல் துறை தலைவர் குமார், சிறுநீரியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுதாகர், மயக்கவியல் சிகிச்சை நிபுணர் மதன் ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
டாக்டர் குமார் கூறுகையில், 'தனியார் மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் செலவாகும். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இலவசமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு செய்யப்படுகிறது. இதற்காக நவீன அறுவை சிகிச்சை கூடம் புதிதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் குறைதீர் அதிகாரி ரவி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
