ADDED : பிப் 13, 2025 04:56 AM
புதுச்சேரி: மறைந்த தலைவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை துவங்கியதும் முதல் அலுவலாக இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. முதல்வர் ரங்கசாமி இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மடுகரையில் பிறந்தவர். 1960ம் ஆண்டு அரசியலில் ஈடுபட தொடங்கியவர் 7 முறை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் என பல பதவிகளை வகித்தார். தனது 91 வது வயதில் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சி தொண்டர்களுக்கு சட்டசபை இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறது.
இந்த இரங்கல் தீர்மானத்தின் மீது அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சி தலைவர் சிவா, துணை சயாநாயகர் ராஜவேலு, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், திமுக எம்.எல்.ஏ., நாஜிம் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து காங்., முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது முதல்வர் ரங்கசாமி இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:
பொருளாதார பேராசிரியராக பணிய துவங்கி, மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதி செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர் மன்மோகன்சிங். 1991ல் நிதி அமைச்சர், 1998ல் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வகித்தார். 2004 முதல் 2014ம் ஆண்டுவரை 2 முறை பிரதமராக பதவி வகித்தார். அவர் 92வது வயதில் இயற்கை எய்தினார்.
அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் இந்த சட்டசபைதெரிவித்துக்கொள்கிறது' என்றார்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம் மறைந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் நீலகங்காதரன், காத்தவராயன், கர்நாடகா முன்னாள் முதல்வர் கிருஷ்ணா, தொழிலதிர் ரத்தன் டாட்டா, இதய நோய் சிகிச்சை நிபுணர் செரியன் ஆகியோரின் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
தொடர்ந்து அனைத்து எம்.எல்.ஏக்களும் மறைந்த தலைவர்களுக்கு சட்டசபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.