ADDED : செப் 25, 2025 03:26 AM
புதுச்சேரி : புதுச்சேரி எம்.ஜி. ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் எம்.ஜி.ரோட்டில் ரோந்து சென்றனர். சித்தி விநாயகர் கோவில் அருகே போக்குவரத்திற்கு இடையூராக 2 நபர்கள் 6 மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர்.
போலீசார் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், வாணரப்பேட்டை, அலைன் தெருவை சேர்ந்த சையத் அக்பல், 58; மூலக்குளம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்த கணபதி, 54; என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
