/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - கடலுார் இடையே ரூ. 650 கோடியில் மேம்பாலம்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
/
புதுச்சேரி - கடலுார் இடையே ரூ. 650 கோடியில் மேம்பாலம்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
புதுச்சேரி - கடலுார் இடையே ரூ. 650 கோடியில் மேம்பாலம்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
புதுச்சேரி - கடலுார் இடையே ரூ. 650 கோடியில் மேம்பாலம்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
ADDED : அக் 14, 2025 07:35 AM

புதுச்சேரி; புதுச்சேரி - கடலுார் சாலையில் ரூ. 650 கோடியில் மேம்பாலம், நான்குவழி சாலை பணிகள் துவங்கப்படும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரையில், 3.877 கி.மீ., நீளத்துக்கு உயர்மட்ட பாலம் ரூ. 436 கோடியில் அமைக்கப்படுகிறது. மேலும், ரூ. 25.05 கோடியில் 13.63 கி.மீட்டருக்கு கிழக்கு கடற்கரை சாலை மேம்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நேற்று நடந்தது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உயர்மட்ட பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், பணிகள் முடிக்கப்பட்ட புதுச்சேரி முதல் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீட்டர் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பேசுகையில், புதுச்சேரி - கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் முள்ளோடை வரை உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்க கோரிக்கை வைத்தனர். மேலும், மாநிலத்திற்கு புதிய சாலைத் திட்டங்கள் கேட்டு, முதல்வர் ரங்கசாமி மனு அளித்தார்.
இக்கோரிக்கையை உடனடியாக ஏற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேடையிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, கூறியதாவது:
புதுச்சேரி மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரையில் உயர்மட்ட பாலமும், அங்கிருந்து முள்ளோடை வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.650 கோடி மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி இந்திரா சிக்னல் நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையில், நான்கு வழிச்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்றுக் கொள்கிறது. இது, புதுச்சேரி முதல் கடலுார் வரையிலான 16.5 கி.மீ., துார பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.
நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையிலான புதிய சாலை வழித்தடத்தை நிர்மாணிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை அமைச்சகம் தயாரிக்கும். வரும் 2026ம் ஆண்டின் துவக்கத்தில் கட்டுமானப் பணிகளை துவங்குவோம்.
மரக்காணம் - புதுச்சேரி நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற ரூ. 2,200 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் வழங்கப்படும். யூனியன் பிரதேசத்தில் சிறு பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 100 கோடி செலவிடவும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரின் அறிவிப்பை, கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், ஆறுமுகம், கல்யாணசுந்தரம், ரமேஷ், வைத்தியநாதன், பாஸ்கர், விவிலியன் ரிச்சர்ட், ராஜசேகர், தீப்பாய்ந்தன், லட்சுமிகாந்தன், நேரு, செல்வம், செந்தில்குமார், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுரானா, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, வெங்கடேசன், தலைமை செயலர் சரத்சவுகான் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.