/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்கால் மேம்பால பணியில் மீண்டும்... சிக்கல்:தேவையற்ற அழுத்தங்களால் 5 மாதங்களாக கிடப்பில்
/
உப்பனாறு வாய்க்கால் மேம்பால பணியில் மீண்டும்... சிக்கல்:தேவையற்ற அழுத்தங்களால் 5 மாதங்களாக கிடப்பில்
உப்பனாறு வாய்க்கால் மேம்பால பணியில் மீண்டும்... சிக்கல்:தேவையற்ற அழுத்தங்களால் 5 மாதங்களாக கிடப்பில்
உப்பனாறு வாய்க்கால் மேம்பால பணியில் மீண்டும்... சிக்கல்:தேவையற்ற அழுத்தங்களால் 5 மாதங்களாக கிடப்பில்
ADDED : டிச 18, 2025 05:25 AM

புதுச்சேரி: நீண்ட இழுபறிக்கு பின் துவங்கப்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேம்பால பணி, தேவையற்ற அழுத்தங்களால் 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல், மேம்பாலம் அமைக்க கடந்த 2008ல் அரசு திட்டமிட்டு, ரூ.3.50 கோடி செலவில் பாலத்துக்கு பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது.
அதன்பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 2016ல் என்.ஆர்.காங்., ஆட்சியில் மீண்டும் ரூ.37 கோடி செலவில், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இந்த மேம்பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச் சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிட்டது.
பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்து, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில், 50 மீட்டருக்கு பாலம் கட்ட வேண்டும். நிதி பிரச்னை காரணமாக 2019ம் ஆண்டு இறுதியில், பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தியதால், 6 ஆண்டுகளாக பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ. 29.25 கோடி செலவில் பாலத்தில் மீதம் உள்ள பணியை முடிப்பதற்கும், காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு, புதிதாக கட்டவும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பால கட்டுமான பணிக்காக உப்பனார் கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணால், அருகில் உள்ள எனது தொகுதி, கோவிந்த சாலையில், வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளதாக நேரு எம்.எல்.ஏ.,வின் அழுத்தம் காரணமாக மீண்டும் பாலம் கட்டுமான பணிகள் நின்று போனது. கடந்த ஐந்து மாதங்களாக பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செப்., மாதத்திற்குள் பணிகள் முடித்து பாலம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. காலதாமதம், ஆகும் காலத்திற்கு கட்டுமான நிறுவனத்திற்கு தேவையில்லாமல் பல கோடி ரூபாய் கூடுதல் தொகை வழங்க வேண்டும். இதற்கு பின் துவங்கப்பட்ட கடலுார் சாலை, முதலியார் பேட்டை ரயில்வே மேம்பால பணிகள் வேகமாக நடந்து பில்லர்கள் அமைக்கப்பட்டு விட்டது.
ஆனால் தேவையற்ற அழுத்தம் காரணமாக உப்பனாறு கால்வாய் பணிகள் நடைபெறாமல் மீண்டும் கிடப்பில் உள்ளது. உடனடியாக கவர்னர் தலையிட்டு கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

