ADDED : பிப் 06, 2024 11:14 PM

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் மற்றும் கிருமாம்பாக்கத்தில் நடந்த'வீரவாள் அபிமன்யூ' தெருக்கூத்து பார்வையாளர்களை கவர்ந்தது.
வி.தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் தொடர்ந்து கலந்துரையாடல், நாடகம் தொடர்பான ஆவணப்படங்கள் திரையிடல் போன்ற கலைபணிகளை செய்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தேர்வு செய்யப்பட்ட நடிகர்களைக் கொண்டு கடந்த ஜன., 24ம் தேதி முதல் பிப்., 2ம் தேதி வரை, பத்து நாட்களுக்கு தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை நடத்தியது.
கரசானுார் தெருக்கூத்து ஆசிரியர்கள் செந்தில், கோவிந்தராஜ் மற்றும் புதுச்சேரி அவினாஷ் சந்தோஷ் ஆகியோர் பயிற்றுநர்களாக இருந்து, 'வீரவாள் அபிமன்யு' என்ற தெருக்கூத்தினைப் பயிற்றுவித்தனர்.
இந்த தெருக்கூத்து கடந்த, 3ம் தேதி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்திலும், 4ம் தேதி கிருமாம்பாக்கம் கிராமத்திலும் நடத்தப்பட்டு, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.
முதல் நாள் நிகழ்வில் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு நடிகர்களை வாழ்த்தி, சான்றிதழ்களை வழங்கினார். யாழ் நிறுவனர் கோபி நன்றி கூறினார்.

