sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்

/

பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்

பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்

பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்


ADDED : ஜூலை 14, 2025 03:53 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனிசாமியின் சூறாவளி பிரசாரத்தால், தென்னாற்காடு மாவட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புது உத்வேகம் பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்' என கடந்த 7ம் தேதி பிரசார பயணத்தை துவக்கி உள்ளார். இதில் கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள 20 சட்டசபை தொகுதிகளில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், மயிலம், செஞ்சி, கடலுார், பண்ருட்டி மற்றும் நெய்வேலி ஆகிய 9 தொகுதிகளில் ரோடு ேஷா மற்றும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

தொண்டர்கள் உற்சாகம்


பழனிசாமியின் இந்த பிரசார பயணத்தால், கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டா போட்டி


மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதி செய்துள்ளதோடு, மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், எப்படியும் வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று அரியணை ஏறும் என்ற நம்பிக்கை நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொகுதிகளிலும் நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு பணத்தை தண்ணீராக செலவிட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், தேர்தலில் 'சீட்' பெற்றிட தற்போதே கட்சி தலைமைக்கு தங்கள் பலத்தை நிரூபிக்க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு, மக்களை அழைத்து வந்திருந்ததை காணமுடிந்தது.

பழனிசாமி 'குஷி'


குறிப்பாக, பண்ருட்டி, விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம் போன்ற கிராமங்கள் அதிகம் கொண்ட தொகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பண்ருட்டியில் மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா தரப்பினர் போட்டி போட்டுக் கொண்டு செய்திருந்த வரவேற்பு ஏற்பாடுகளையும், திரட்டியிருந்த மக்கள் கூட்டத்தை கண்ட பழனிசாமி உற்சாகமடைந்து, அடுத்தது அ.தி.மு.க., ஆட்சிதான். இதற்கு பண்ருட்டியே சாட்சி என்றார்.

பெண்கள் உற்சாகம்


பிரசார பயணத்தில் பழனிசாமி, விவசாயிகளின் பிரச்னைகள், நுாறு நாள் வேலை திட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்து பேசுகையில் கிராமப்புற பெண்கள் ஆமோதித்து வரவேற்றது, பழனிசாமியை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.

உள்ளூர் பிரச்னை 'மிஸ்சிங்'


பழனிசாமி பேசுகையில் தி.மு.க.,வையும், தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினை மட்டுமே விமர்சனம் செய்தார். தி.மு.க., ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, தி.மு.க., ஆட்சியில் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் என்று குற்றம் சாட்டியும், ஊழல் புகார்கள் குறித்து புள்ளி விபரம் இல்லாததால், கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது.

மாநில பிரச்னைகளை பேசினாலும், அந்தந்த தொகுதியில் உள்ள பிரதான பிரச்னைகள் மற்றும் உள்ளூர் அரசியல் குறித்து பேசாதது மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடலுாரில் மட்டுமே உள்ளூர் பிரச்னையான துறைமுக விரிவாக்கம், புதிய பஸ் நிலைய விவகாரங்களை பேசினார்.

கூடும் செல்வாக்கு


பழனிசாமியின் இந்த முதல் சுற்று பிரசார பயணம், கட்சி நிர்வாகிகள் மத்தியில் புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமியை வரவேற்க கட்சியினர் செய்த ஏற்பாடுகள் மக்களிடையே மீண்டும் அ.தி.மு.க.,வின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.

'பல்ஸ்' பார்த்த மாற்று கட்சியினர்

பழனிசாமியின் பிரசார பயண நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டங்களில் மாற்று கட்சியினரின் கூட்டமும் கணிசமாக இருந்தது. இது, பிற கூட்டணியில் உள்ள கட்சிகள், அ.தி.மு.க., அணிக்கு மாறுவதற்கான முன்னோட்டமாகவே உணரப்படுகிறது.



கவனிப்பாரா பழனிசாமி

பழனிசாமி பிரசாரத்தின்போது, கொடுக்கப்படும் துண்டு சீட்டில் எழுதி தரும் பிரச்னைகளை அப்படியே படிப்பது, மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. குறிப்பாக, நெய்வேலி பிரசாரத்தின்போது, பாதுகாவலர் கொடுத்த துண்டு சீட்டை படித்துவிட்டு, என்.எல்.சி.,க்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு அரசு நிர்ணய தொகையை கொடுக்காமல், சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இழப்பீடு குறித்த முழுவிபரங்களை தெரிந்து கொண்டு விவசாயிகளின் தேவைகளை அறிந்து பேசினால் நல்லாயிருக்குமே என கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் புலம்பியதை கேட்க முடிந்தது.



நமது நிருபர்கள்






      Dinamalar
      Follow us