ADDED : டிச 29, 2024 05:45 AM

லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பிரசார வேனும் தயாராகிவிட்டது.
லாட்டரி அதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி அரசியலில் களம் இறங்கியுள்ளார். அதற்கு அச்சாரமாக காமராஜர் தொகுதியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியால் பா.ஜ., மேலிடம் மீது அதிருப்தியில் உள்ள கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக் ஆகிய 6 எம்.எல்.ஏ.,கள் பங்கேற்றனர்.
அடுத்த கட்டமாக இந்த எம்.எல்.ஏ.,களின் தொகுதிகளில் மார்டின் குழுமம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண உதவிகள் வழங்கும்போது, ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசுவதற்கு வசதியாக பிரசார வேனும் தயாராகி உள்ளது. இந்த வேன் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏ.எப்.டி., மில்லை அரசால் நடத்த முடியவில்லை என்றால், எங்களிடம் கொடுத்தால் நடத்த தயாராக உள்ளதாக லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே இது புதுச்சேரி அரசியலில் புயலை கிளம்பி இருந்த சூழ்நிலையில், பிரசார வேனும் தயாராகி உள்ளதால், இனி அனல் பேச்சுக்கு பஞ்சம் இருக்காது.
