மாநில அந்தஸ்து பெற்று தருவோம்: காங்., மாநில தலைவர் பேச்சு
மாநில அந்தஸ்து பெற்று தருவோம்: காங்., மாநில தலைவர் பேச்சு
ADDED : ஏப் 06, 2026 09:18 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும் என காங்., தலைவர் வைத்திலிங்கம் பேசினார்.
புதுச்சேரி இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் பேசியதாவது:
இந்தியாவின் விடிவெள்ளியாகவும், எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய தலைவராக ராகுல் உள்ளார். இளைஞர்களின் நம்பிக்கையாகவும் எதிர்காலமாகவும் இருக்கின்றார். புதுச்சேரியும், மக்கள் நல்ல வாழ்க்கையை பெற வேண்டும் என்றால் அதனை ராகுலால் மட்டுமே செய்து தர முடியும்.
சட்ட சபை தேர்தலுக்கு பிறகு புதுச்சேரிக்கு கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும். 2029ல் நாட்டின் பிரதமர் ராகுல் தான். அவர் பிரதமராக அமரும்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை காங்., பெற்று தரும்.
மோடி புதுச்சேரி வந்தபோது மாநில அந்தஸ்தை பற்றி எதுவும் சொல்லாமல், மவுன சாமியாக சென்றுவிட்டார். ரங்கசாமியும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் மவுனசாமியாகி விட்டார். இங்குள்ள அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு தரவில்லை. இந்த அரசு ஊழலில் திளைத்து கொண்டுள்ளது. இந்த அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த அரசினை கை சின்னம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளித்து துாக்கி எறிய வேண்டும் என்றார்.
