UPDATED : மே 01, 2026 11:03 PM
ADDED : மே 01, 2026 10:51 PM
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம்நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று (1ம் தேதி) மதியம் திரவுபதியம்மன் - அர்ஜூனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 3ம் தேதி காலை தேர் திருவிழா, 4ம் தேதி காலை 10:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 6ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

