/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் சபாஷ்
/
ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் சபாஷ்
ADDED : மார் 02, 2026 03:51 AM
புதுச்சேரி: பிரதமரின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு செயல்படுத்தும் எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை பொதுமக்களின் பார்வைக்கு, புதுச்சேரி அரசு நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.
புதுச்சேரியில் 54 அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் பல நுாறு கோடி மதிப்பிலான மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காமராஜ் கல்வி உதவி திட்டம், இலவச அரிசி, இலவச கோதுமை, முதியோர் பென்ஷன், மகளிர் உரிமை தொகை, பெண் குழந்தைகள் பெயரில் வைப்பு தொகை என எண்ணற்ற திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் பெரும்பாலான திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
இதற்கு காரணம், எந்தவொரு திட்டங்களையும் சரிவர மக்களிடம் அரசு துறைகள் கொண்டு செல்வது கிடையாது. மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக எடுத்து சொல்வதும் கிடையாது. இதனால் திட்டங்களின் பயன் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் உள்ளது.
இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, அனைத்து அரசு துறைகளும் சூப்பராக செயல்பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகளில் தங்களுடைய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களையும் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக அறிவித்தன.
இது, மத்திய, மாநில அரசு திட்டங்களை புதுச்சேரி மக்களிடம் முழுமையாக கொண்டு போய் சேர்த்தது. ஒவ்வொரு துறையின் அறிவிப்புகளும், பணிகளும் சூப்பர்.
இவ்வளவு திட்டங்கள் ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படுகிறதா என, மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.
அதேபோல், அனைத்து ஏற்பாடுகளும் நல்ல முறையில் செய்யப்பட்டு இருந்தது. அரசு துறைகளின் கடும் உழைப்பை இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, கடந்த இரு வாரங்களாக அரசு துறைகளுக்கு சுத்தமாக துாக்கம் இல்லை. இரவு பகலாக உழைத்தன.
ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக்கொண்டு தனி லிஸ்ட் போட்டு பொறுப்புகளை ஏற்று கவனித்தன. கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், செயலர்கள், மாவட்ட கலெக்டர், துறை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள், போலீசார் வரை தினமும் பம்பரமாக சூழன்று கச்சிதமாக அனைத்தையும் செய்து முடித்தனர்.
குறிப்பாக, செய்தி மற்றும் விளம்பரத் துறையின் ஏற்பாடுகள்நேர்த்தியாகவும், செம்மையாகவும் இருந்தது. அனைத்து அரசு துறைகளையும் செய்தி மற்றும் விளம்பரத் துறை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தது.
இதனால், நான்... நீ... என்று போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு துறையும் தனது பணிகளையும் செம்மையாக செய்து முடித்தனர். பிரதமரின் வருகையால் கடந்த 5 நாட்களாகவே போலீசாருக்கு சுமை. குடும்பத்தையும் மறந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பெரிய அளவில் சிரமம் தரவில்லை. போக்குவரத்து நெரிசலையும் அழகாக சமாளித்தனர். போலீசாரின் ஏற்பாடுகள் அனைத்துமே இந்த முறை கச்சிதமாகவே கைதட்டும் அளவில் இருந்தது. ஒட்டுமொத்தத்தில் எந்த வித குளறுபடிகளும் இல்லாமல், அமைதியாக பிரதமரின் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
இந்த பெருமை கவர்னர், முதல்வர், மற்றும் அனைத்து அரசு துறைகளையும் சாரும்.
இது போன்ற ஒற்றுமை - கைகோர்ப்பு - ஒருங்கிணைப்பு என்றுமே வி.ஐ.பி., வருகையின்போது தொடர வேண்டும். அனைத்து அரசு துறைகளுக்கு சபாஷுடன் ஒரு சல்யூட்.

